டிரான்ஸ்பார்மர் திடீரென்று வெடித்ததால், கல்பாக்கம் 2 வது அணு உலையில் பயங்கர தீ

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் 2 வது அணு உலையில் டிரான்ஸ்பார்மர் திடீரென்று  வெடித்தால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சென்னை கல்பாக்கம் அணுமின்நிலைய வளாகத்தில் சென்னை அணுமின்நிலையம், இந்திராகாந்தி அணுஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இதில் விஞ்ஞானிகள், அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 7ஆயிரம் பேர் வேலை பார்க்கிறார்கள்.

இங்குள்ள சென்னை அணு மின்நிலையம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டது. இதில் 220 மெகாவாட் திறன் கொண்ட 2 அணு உலைகள் இயங்கி வருகிறது. இதன் மூலம் 440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அணு உலைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடக்கும்.  

 கடந்த மார்ச் மாதம் 3 ம் தேதி முதல் 2வது அணு உலையில்  மின்உற்பத்தியை நிறுத்தப்பட்டு  பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. பராமரிப்பு பணி முடிந்த நிலையில் அதிகாரிகள், விஞ்ஞானிகள் மேற்பார்வையில் நேற்று காலை பணி மீண்டும் தொடங்கியது. அணு உலையை இயக்க துவங்கியவுடன் திடீரென அதில் உள்ள டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் வெடித்து தீபற்றி எரிந்தது.  உடனடியாக அணு உலையின் செயல்பாடு நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கிருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஒரு மணி நேரம்  போராடி  தீயை அணைத்தனர். பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில் 2 வது அணு உலையில் எரிந்த டிரான்ஸ்பார்மரை மாற்றிவிட்டு  புதிய டிரான்ஸ்பார்மர் மகாராஷ்டிராவில் இருந்து கொண்டு வரப்பட்டு அமைக்கப்பட உள்ளது. இதற்கு 20 நாட்கள் வரை ஆகும் என்று தெரிகிறது.  இதனால் கல்பாக்கம் 2 வது அணு உலையில் 1 மாதம் மின்உற்பத்தி நடக்காது.  தமிழகத்தில் ஏற்கனவே மின்வெட்டு உள்ள நிலையில் கல்பாக்கம் அணு உலையில் தீ விபத்து ஏற்பட்டு 2 வது அணு உலையின் செய்பாடு முடங்கியுள்ளதால் கூடுதல் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
   
இது குறித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான மருத்துவ குழு நிர்வாகி டாக்டர் புகழேந்தி கூறுகையில், ‘கல்பாக்கம்  2 வது அணு உலையில் மறுசீரமைப்பு, பராமரிப்பு பணி மேற்கொள்ளும்போது தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று சந்தேகம் உள்ளது. கடந்த 1999 மார்ச் மாதம் இதே போல் 2 வது அணுஉலையில் கதிர்வீச்சு தொடர்பான பாதிப்பு ஏற்பட்டது. அப்போது ஆய்வு செய்த அணு சக்தி ஒழுங்கு முறை ஆணையம் (ஏஆர்டி) தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது‘ என்றார். 

இதுகுறித்து அணுமின் நிலைய உயர் அதிகாரி கூறுகையில் ‘அணுமின் நிலைய 2 வது யூனிட்டில் டிரான்ஸ்பார்மர் வெடித்தால் தீ பிடித்தது. உடனடியாக உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் அணுஉலைக்கு ஆபத்து இல்லை. விரைவில் மின்உற்பத்தியை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது‘ என்றார். 

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click