தமிழகத்தின் பிற மாவட்டங்களைப் போல சென்னையிலும் சம அளவில் மின் வெட்டை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்வதற்கான நெறிமுறைக் குழுக் கூட்டம், ஒரு வாரத்தில் கூடவுள்ளது. இதில் சமமான மின் வினியோக திட்டம் உருவாக்கப்பட உள்ளது.
மின்சார பற்றாக்குறையால், சென்னையில் அதிகாரப்பூர்வமாக இரண்டு மணி நேர மின் வெட்டு அமலாகிறது. மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்படாமல் பல மணி நேரங்களுக்கு மின் வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான மின் வினியோகம் மற்றும் மின் வெட்டை அமல்படுத்த வேண்டும் என்று தென்னிந்திய இரும்புத் தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில், இந்திய நிகழ்ச்சிகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது.