அரசு போக்குவரத்து கழகத்துக்கு உதவி பொறியாளர்கள் தேவை!

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தொழில் மற்றும் செயல்வேலைவாய்ப்பு மதுரை கிளை அலுவலர் கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழகத்தில் உதவி பொறியாளர் பணியிடம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. அதன்படி, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.இ. மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அத்துடன் ஒரு வருட தொழில்பழகுனர் பயிற்சி(அப்ரண்டீஸ்) முடித்திருக்க வேண்டும். வயது வரம்பை பொறுத்தமட்டில், 1.1.2014 அன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 40 வயதுக்குள்ளும், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்கள் 35 வயதுக்குள்ளும், பொதுப்பிரிவினர் 30 வயது நிரம்பாதவராகவும் இருக்க வேண்டும்.
குறிப்பிடப்பட்ட கல்வித்தகுதி உள்ள, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பதிவுதாரர்கள் தங்களது பதிவு மூப்பு விபரத்தை வருகிற 28 ஆம் தேதிக்குள் மதுரையில் உள்ள தொழில் மற்றும் செயல்வேலைவாய்ப்பு கிளை அலுவலகத்தில் நேரில் வந்து சரிபார்த்து கொள்ளலாம். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படாது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: