நாமகிரிப்பேட்டை: மின்வாரியம், ஆவினில் முன்பணம் கட்ட தடை விதிக்கப்பட்டதுடன், ஏற்கனவே முன் பணம் கட்டியவர்கள் விவரத்தை வருமானவரித்துறை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளது.
புழக்கத்தில் உள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, மத்திய அரசு, கடந்த, 8ல் அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை, டிச., 30க்குள் வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும், டெலிபோன், மின்கட்டணம், பஸ், ரயில் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்தலாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது. வங்கிகளில் பணத்தை மாற்றினால், தேவைக்கு அதிகமாக இருக்கும் பணத்திற்கு வருமானவரித்துறை கணக்கு கேட்கும் என்பதற்காக, பெரிய மில், தொழில் அதிபர்கள் மின் பல மாதங்களுக்கான மின் கட்டணத்தை, முன்பணமாக கட்டத் துவங்கினர். ஆவின் பால் முகவர்கள் நாள்தோறும் வசூல் ஆவதை விட, பல வாரங்களுக்கு முன் தொகையாக பல லட்சங்களை கட்டி சென்றனர். அதேபோல், அதிக கட்டணம் செலுத்த வேண்டிய இடங்களில், நிலுவைத் தொகை மட்டுமின்றி, முன்பணமாக வசூல் ஆவது குறித்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றது. இதையடுத்து, பாக்கிதொகை, தற்போதை கட்டணம் மட்டுமே வசூல் செய்ய வேண்டும் என்றும், முன் பணமாக கட்டணங்களை செலுத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பணமாக பல லட்சம் கட்டிய தொழில் அதிபர்கள் குறித்த விவரங்களையும் வருமானவரித்துறை, அனைத்து துறையிடமும் கேட்டுள்ளது. அவர்கள் பட்டியலை வைத்து, ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மின்வாரியத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், முதல் நாளில், 45 லட்சம் ரூபாய், முன் பணமாக மின் கட்டணம் வசூலாகியது. இது குறித்த செய்தி வெளியானவுடன், மின் கட்டணத்திற்கு முன்பணம் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, முன்பணம் கட்டியவர்கள் பட்டியலை வருமானவரித்துறை கேட்டுள்ளது. மின்வாரியத்தில், தற்போது, மின் இணைப்புக்கான எஸ்டிமேட் தொகை கூட பெற மறுக்கின்றனர். இதனால், உண்மையாக இணைப்பு பெற காத்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி தினமலா்.
No comments:
Post a Comment