அரசு ஊழியர்களுக்கு அறிமுகமாகிறது இணையதள கல்வி


அரசு ஊழியர்களுக்கு, இணையதளம் மூலமாக, கணினி பயிற்சி வழங்குவதற்கான பாடத் திட்டத்தை அரசு தயார் செய்துள்ளது.

கணினி தொடர்பான, அடிப்படை பயிற்சி மற்றும் அரசு அலுவலகங்களை கணினி மயமாக்கல் குறித்த பயிற்சி, அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிகளை அன்றாட அலுவலக பணியில், பயன்படுத்த வேண்டும்.இதற்கு, போதியளவு வாய்ப்பு இல்லாததால், கணினி தொடர்பான பயிற்சிகள் முழுமையான பயன் தருவதில்லை என, அரசு நடத்தியுள்ள ஆய்வில் தெரிய வந்துள்ளது. எனவே, பயிற்சி தொடர்பான பாடங்களை, "ஆன்-லைனில்' சேர்த்து விட்டால், எப்போது வேண்டுமானாலும், அந்த விவரங்களை ஊழியர்கள் தெரிந்து கொள்ள முடியும். மென்பொருள் சூத்திரங்களை, ஆன்-லைனில் வைத்திருந்தால், எளிதாக அறிந்து கொள்ளமுடியும். மேலும், பாடத் திட்டத்தை ஆன்-லைன் மூலம், எவர் வேண்டுமானாலும் பார்க்க முடியும் என்பதால், பயிற்சி ஒரே நேரத்தில் பரவலாக்கப்படும் போன்ற காரணங்களுக்காக, கணினி பயிற்சி தொடர்பான, ஆன்-லைன் பாடத் திட்டத்தை அரசு தயார் செய்கிறது.

பாடத் திட்டங்களை வாசிக்கவும், வீடியோ மற்றும் ஆடியோவில் பார்த்து கேட்கும் படியான வசதிகளும் செய்யப்படுகின்றன. ஊழியர்களின் வசதிக்கு ஏற்ப, அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்தே, பாட வகுப்புகளில் பங்கேற்று தேர்வுகளை எழுத முடியும். ஆன்-லைனிலேயே, கணினி தொடர்பான வகுப்புகள் நடத்தி, அதற்கான தேர்வுகளை அறிவித்து, சான்றிதழ்கள் வழங்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, இதற்கான, பாடத் திட்டங்களை வகுத்து ஆன்-லைனில் வெளியிடுதல், வகுப்புகள் மற்றும் தேர்வுகளை நடத்தும் பணியை செய்கிறது.ஆன்-லைன் கணினி படிப்புக்காக, 11 லட்சம் ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பாடத் திட்டங்களை வகுக்கவும், அதற்கான, ஆன்-லைன் வசதிகளை மேம்படுத்தவும், தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டு உள்ளது.டெண்டர் இறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில், அரசு ஊழியர்களுக்கான ஆன்-லைன் கணினி வகுப்புகள் தொடங்கும் என, தகவல் தொழில்நுட்பத் துறையினர் கூறுகின்றனர்.

No comments:

Card Billing staff working hour

 Card Billing staff working hour     Click